கிலானி இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் திகார் சிறை கைதி ‘ஹூரியத்’ தலைவராக அறிவிப்பு: பாகிஸ்தானின் அடாவடி நியமனத்தால் காஷ்மீரில் பதற்றம்
9/9/2025 5:25:55 PM
புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி இறந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில், ஹூரியத் அமைப்பின் புதிய தலைவராக, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஸ்ரத் ஆலம் பட் என்பவரை, அந்த அமைப்பின் தலைவராக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவரான சையத் அலி ஷா கிலானி (91) கடந்த சில நாட்களுக்கு முன், உடல் நலக்குறைவால் இறந்தார். அவர் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், கிலானிக்கு நெருக்கமானவராக கருதப்படும் பாகிஸ்தான் ஆதரவாளர் மஸ்ரத் ஆலம் பட் (50) என்பவரை, ஹூரியத் அமைப்பின் புதிய தலைவராக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இந்தியா தரப்பில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
காரணம், தீவிரவாத செயலுக்காக நிதி பரிமாற்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஸ்ரத் ஆலம் பட் மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் மற்றும் பொது பாதுகாப்பு சட்டப் பிரிவின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை ஹுரியத் தலைவராக பாகிஸ்தான் ஏன் தேர்ந்தெடுத்தது? என்ற கேள்வியும் எழுகிறது. கிலானி ஹூரியத் அமைப்பில் இருந்து பதவி விலகிய பின்னர், மற்றொரு பாகிஸ்தான் ஆதரவாளரான அஷ்ரப் சஹ்ராய் என்பவரை அந்த அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பியது. ஆனால் அவர் கடந்த மே மாதம் இறந்தார். தற்போது கிலானியும் இறந்ததால், மஸ்ரத் ஆலம் பட்டை புதிய தலைவராக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. முஸ்லிம் லீக் தலைவரான இவர், 2010 அக்டோபரில் கைது செய்யப்பட்டார்; பின்னர் 2015 மார்ச்சில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் ஏப்ரல் 17, 2015 அன்று கைது செய்யப்பட்டு நகரில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹுரியத் அமைப்பு முடங்கி கிடக்கும் நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் மஸ்ரத் ஆலம் பட் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2010ம் ஆண்டு மே முதல் செப்டம்பர் மாத வரை நடந்த பாதுகாப்பு படையினருக்கு எதிரான கல் வீச்சு சம்பவங்களில் 110 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பொதுமக்கள் 537 பேர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் கிலானி மற்றும் அவரது கூட்டாளிகள் இருந்தனர். இவர்கள் பாகிஸ்தானையும், லஷ்கர் - இ - தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளை வெளிப்படையாக ஆதரித்தனர். கடந்த 2015 ஏப். 15ம் தேதி நடந்த ஊர்வலத்தின் போது, ‘தேரா மேரா க்யா அர்மன், காஷ்மீர் பனேகா பாகிஸ்தான்’ மற்றும் ‘ஹபீஸ் சயீத் கி க்யா பாகாம், காஷ்மீர் பனேகா பாகிஸ்தான், ஜீவ் ஜீவ் பாகிஸ்தான்’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் சிறப்புக் குழுவின் தலைவர் ஷாஹ்ரியார் அஃப்ரிடி, ஹூரியத் அமைப்பின் தலைவராக மஸ்ரத் ஆலம் பட்டை நியமித்ததை வரவேற்றுள்ளது. ஹுரியத் அமைப்பு மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்த நிலையில், இந்த பிரிவினைவாத அமைப்பு பாகிஸ்தானை தளமாக கொண்டு மீண்டும் செயல்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கப்பட்ட மஸ்ரத் ஆலம் பட்டுக்கு, காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதால், அடுத்த சில நாட்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்கள் குறித்த அச்சமும் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு மற்றும் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.