நாடு முழுவதும் 68 பேர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை: 4 தமிழக வக்கீல்களுக்கு ஐகோர்ட் நீதிபதி பதவி: பழங்குடியின நீதிபதி உட்பட 10 பேர் பெண்கள்; 44 பேர் வக்கீல்கள்
9/4/2025 5:44:45 PM
புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நான்கு வழக்கறிஞர்கள் உட்பட 68 பேர் 12 உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக தேர்வு செய்து, அதற்கான பரிந்துரை பட்டியலை கொலீஜியம் குழு ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளது. இதில், பழங்குடியின பெண் நீதிபதி உட்பட 10 ெபண்கள் மற்றும் 44 பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலீஜியம்’ குழுவின் கூட்டம் கடந்த ஆக. 25 மற்றும் செப். 1ம் தேதி நடைபெற்றது. அப்போது பல மாநில உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 112 பேரின் ெபயர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியலுக்கு பரிசீலிக்கப்பட்டன. இவர்களில் 82 பேர் பார் அசோசியேசன் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருபவர்கள்.
இறுதியாக, சென்னை, அலகாபாத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 உயர் நீதிமன்றங்களில் 68 நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டது. மேற்கண்ட பட்டியலின்படி 24 பேர் தற்போது நீதிபதிகளாக பணியில் உள்ளனர். மேலும் 44 பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் சுந்தரம் மதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகிய நான்கு பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பல மாநிலங்களிலும் பணியாற்றிய வழக்கறிஞர்களும் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின பெண் நீதிபதி மார்லி வாங்குங்கை, கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பார். கொலீஜியம் பரிந்துரைத்துள்ள 68 நீதிபதிகளில் 10 பேர் பெண்கள் ஆவர்.
மேற்கண்ட கொலீஜியம் குழுவின் பரிந்துரை பட்டியல், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவை வழங்குவார். அதனை தொடர்ந்து புதியதாக நியமிக்கப்பட்ட 68 பேரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பல்வேறு மாநிலங்களில் பதவியேற்பர். கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரே நேரத்தில் 3 பெண்கள் உள்பட 9 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அடுத்த சில நாட்களில் மாநில உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகள் புதியதாக நியமிப்பதற்காக பரிந்துரை பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.