தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் மனு: டிசம்பருக்குள் தேர்தல் என அமைச்சர் நேரு தகவல்
9/4/2025 5:43:35 PM
புதுடெல்லி: நகர்புறம் மற்றும் 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்தன. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை விடுத்து மீதமுள்ள 29 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, கடந்தாண்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுடன் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் விடுபட்ட மேற்கண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக விடுபட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம், நகர்புறம் மற்றும மேற்கண்ட 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திட தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நகர்புறம் மற்றும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘வரும் 15ம் ேததிக்குள் விடுபட்ட நகர்புறம் மற்றும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க முடியாது. வார்டு மறுவரையறை பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும் கூட, கொரோனா பரவல் காரணமாக சில பணிகள் நிலுவையில் உள்ளன. அந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படும். எனவே, 9 மாவட்டங்களிலும் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதம் நீடிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் அளித்த பேட்டியில், ‘உள்ளாட்சி தேர்தலை வரும் 15ம் தேதி நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வார்டு மறுவரையறை செய்ய வேண்டிய பணிகள் நிலுவையில் உள்ளதால் அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முழு விபரங்களையும் அறிவிக்கும். நீதிமன்ற உத்தரவின் அடிப்டையில், வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தமட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கிட்டத்தட்ட புதியதாக 6 மாநகராட்சிகள், 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், வார்டு வரையறை முடிந்தபின் தேர்தல் நடத்தப்படும்’ என்றார்.
''திங்கள்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம்''
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் 2 நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதன்படி, 9 மாவட்டங்களில் மொத்தம் 76,59,720 வாக்காளர்கள் உள்ளனர். நகர்புறம், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளது. இந்தநிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் திங்கள் கிழமை (6ம் தேதி) பகல் 12 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கூட்டத்தை நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று காலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.