5 மீனவர் விடுதலைக்கு சொந்தம் கொண்டாடுவதா? ஓ.பன்னீர்செல்வம் பாய்ச்சல்
11/21/2014 3:43:07 PM
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினாரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம் அவர்களை மீட்க, இடைவிடாத நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான். கச்சத் தீவை தாரை வார்த்த ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் கடந்த 2011ம் ஆண்டு தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் பிரிவின் கீழ் உள்நோக்கத்துடன் பொய் வழக்கை இலங்கை அரசு தொடர்ந்தது.
5 அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு, மீனவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்காட வழக்கறிஞரை நியமித்திடவும், ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியும் ஆணையிட்டார். இந்த 5 அப்பாவி மீனவர்களுக்கு, மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் 30.10.2025 அன்று தீர்ப்பு வழங்கியது. மீனவர்களின் உயிரினை காக்கவும், அவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது. மேலும், வழக்குச் செலவுக்காக ரூ.20 லட்சம் தமிழக அரசு வழங்கியது.
தமிழக அரசின் இடைவிடா தொடர் முயற்சிகளின் காரணமாக, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின்படி 5 மீனவர்களும் இலங்கை அரசால் 19.11.2025 அன்று விடுவிக்கப்பட்டு, நேற்று தாயகம் திரும்பியுள்ளார்கள். அனைவரும் நேற்று நள்ளிரவில் சென்னை விமான நிலையம் வந்தந்தடைந்த போது, தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். 5 மீனவர்கள் தங்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதற்கு ஏதுவாக, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 லட்சம் நிதி தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. 5 மீனவர்களும் அவர்களது சொந்த ஊருக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது பன்னாட்டுப் பிரச்னை என்ற காரணத்தால், இலங்கை அரசுடன் தமிழக அரசு நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது. 5 மீனவர்களும் விடுதலை பெற்றது மகிழ்ச்சிக்கு உரியது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. 5 மீனவர்களின் விடுதலைக்குத் தாங்கள் தான் காரணமென ஒரு சிலர் மார்தட்டிக் கொள்வது, தமிழ்நாட்டு மீனவர்களை கொச்சைப்படுத்துவது ஆகும். மீனவர்களின் நலனுக்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அரசு அதிமுக அரசு தான். உண்மையான மீனவ நண்பன் யார் என்பதும் தமிழக மீனவர்களுக்கு நன்கு தெரியும். மீனவர்கள் நலன் காக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும்.