குழந்தைகள் மரணம் தடுக்க சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி: ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை
11/21/2014 3:22:49 PM
சென்னை: அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பதை தடுக்க, சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:தருமபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் குறித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர் அளித்துள்ள பேட்டியில், நடைபெற்ற மரணங்கள் அனைத்தும் இயற்கையானது என்றும் ஆண்டுதோறும் 20 ஆயிரம் குழந்தைகள் இதுபோன்று இறப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மரணம் குறித்து மேற்கண்ட டாக்டர்கள் தெரிவித்துள்ள கருத்து மிகவும் நியாயமற்றது. மரணம் இயற்கையா? செயற்கையா? என்பதல்ல பிரச்சனை. மாறாக, இந்த மரணங்களை தடுத்திருக்க முடியுமா? இல்லையா என்பதுதான் அடிப்படையான பிரச்சனை. தடுக்க முடியாமல் போனதற்கு சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் பயணிக்க வேண்டிய தூரம், நேரம் மற்றும் வசதி, மருத்துவமனை வசதிகள், சிகிச்சைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், உபகரணங்கள் சீர்செய்ய முடியாத உடல்நலக் கோளாறு என்று பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.
இந்த மரணங்கள், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய்க்கான சிகிச்சைகள் ஆகியவற்றிற்கு போதுமான நிதிஒதுக்கீடு, உட்கட்டமைப்பு வசதிகள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையையே வெளிப்படுத்துகிறது. அரசு இவற்றிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.