சென்னை:‘செல்போன் ரிங்டோனில் தமிழ் பாடல் வையுங்கள்; குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்’ என்று மு.க.ஸ்டாலின் பேசினார். திருவிக நகர் பகுதி திமுக செயலாளர் தமிழ்வேந்தன் மகன் அன்பழகன் & ராதிகா திருமணம் வியாசர்பாடியில் இன்று காலை நடந்தது. திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் பேசியதாவது:
நான் மேயராக இருந்து பணியாற்றியதை இப்போது மக்கள் அதிகம் பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் இப்போதைய மேயர்தான். நான் சிறப்பாக பணியாற்ற தமிழ்வேந்தன் போன்ற கவுன்சிலர்கள் துணை நின்றனர். செல்போன் ரிங்டோன் பற்றி இங்கே தமிழ்வேந்தன் பேசினார். சில ரிங்டேன்களில் இந்தி, ஆங்கிலம் போன்ற பாடல்கள் வருகிறது. நாம் தமிழர்கள். தமிழ்நாட்டில் இருக்கிறோம். செம்மொழி அந்தஸ்து கிடைத்த காலத்தில் இருக்கிறோம். எனவே செல்போன் ரிங்டோனில் அழகான தமிழ் பாடல் வையுங்கள். செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடல் வரிகளைத்தான் நான் ரிங்டோனாக வைத்திருக்கிறேன்.
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள். தமிழ் உணர்வு ஊட்டுங்கள். சிலர் மடக்குவதாக நினைத்து என் பெயர் பற்றி பேசுவது உண்டு. எனக்கு வைக்கப்பட்டது தமிழ் பெயர் அல்ல. ஆனால், காரண பெயர். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைந்தபோது அதற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய என் தந்தை எனக்கு இந்த பெயரை சூட்டுவதாக அறிவித்தார். எனக்கு வைக்க நினைத்த பெயர் அய்யாத்துரை. ஸ்டாலின் என்ற பெயரால் எனக்கு நன்மைகளும் ஏற்பட்டது. தீமைகளும் ஏற்பட்டது.
என்னை சர்ச் பார்க் கான்வென்டில் படிக்க வைக்க முரசொலி மாறன் விரும்பினார். அதற்காக அவர் முயன்றபோது, ‘ஸ்டாலின் என்ற பெயர் இருந்தால் சேர்க்க மாட்டோம்’ என்றார்கள். அதனால் நானும், என் தங்கை செல்வியும் வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டோம். நல்லவேளை.. சர்ச் பார்க் பள்ளியில் படிக்க வில்லை. எங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு தமிழ் பெயர்கள்தான் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். மணமக்களை வாழ்த்தி டிகேஎஸ் இளங்கோவன் எம்பி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் சேகர்பாபு, செங்கை சிவம், உசேன், மதிவாணன், ப. ரங்கநாதன், சங்கரி நாராயணன் ஆகியோர் பேசினர். தலைமை நிலைய செயலாளர்கள் சதாசிவம், கிரிராஜன், ஐசிஎப் முரளி, மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.