தாம்பரம் அருகே கார் மோதி தந்தை பலி; மகன் சீரியஸ்
தாம்பரம்: திருப்போருர் அருகே மேலைக்கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (47). தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன்கள் டேனியல், டேவிட். தாம்பரம் அருகே உள்ள தர்காஸ் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, நேற்று மாலை பைக்கில் டேனியலுடன் அந்தோணி சென்றார். பைக்கை டேனியல் ஓட்டினார். தாம்பரம்- கிஷ்கிந்தா சாலையில் சென்றபோது எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அந்தோணி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த மகன் டேனியல் (22), சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்: திண்டிவனத்தை சேர்ந்தவர் சிவா (40). கீழ்கட்டளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று ஓட்டல் உரிமையாளரின் பைக்ைக எடுத்து கொண்டு நண்பரை பார்க்க சென்றார். பின்னர் நண்பரை அழைத்து கொண்டு பைக்கில் ஓட்டலுக்கு திரும்பினார். பல்லாவரம்-துரைபாக்கம் ரேடியல் சாலையில் வந்தபோது, எதிரே வந்த மாநகர பஸ், பைக் மீது மோதியது. இதில், சிவா, சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பர் படுகாயத்துடன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.