பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த நவம்பர் மாதம் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளின் விவரம் கிடைத்துள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது.பாரீசில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 13ம் தேதியன்று தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு, காபி ஷாப் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதலுக்கு பிறகு பாரீசில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு இறங்கியது. தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாரிசில் நாசவேலையில் ஈடுபட்ட ஐஎஸ் தீவிரவாதிகளின் பெயரை ஜெர்மனியை சேர்ந்த புலனாய்வு குழு ஒன்று வெளியிட்டுள்ளது.
பாரிசின் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஒமர்(29), பஸ் டிரைவராக பணிபுரிந்த சமி(28), முகமது (23) ஆகியோர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் இணையதளத்தில் 3 பேரின் பெயர்கள், அவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருப்பதாக ஜெர்மனி குழு தெரிவித்துள்ளது. இதேபோல் 22 ஆயிரம் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குழுவினர் கூறியுள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களில் பெரும்பாலான விவரங்கள் போலியானவை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெர்மனி புலனாய்வு குழு வெளியிட்ட தகவல்கள் குறித்த உண்மை தன்மையை கண்டறியும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசு இறங்கியுள்ளது.