சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை சார்பில் டாக்டர். அம்பேத்கர் 125வது பிறந்தநாளை முன்னிட்டு பிரச்சார ரத யாத்திரை தமிழகம் முழுவதும் செல்ல உள்ளது. இந்த ரத யாத்திரையை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சத்தியமூர்த்திபவனில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் எஸ்சி துறை தலைவர் டாக்டர்.கே.ராஜூ, தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, அகில இந்திய செயலாளர் திருநாவுகரசர், எஸ்சி துறை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : தமிழக காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று மாலை சத்தியமூர்த்திபவனில் நடக்கிறது. திமுகவுடன் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த சோனியா, ராகுல் சார்பில் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஓரிரு நாட்களில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து தொகுதி எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
அதே போன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு விரைவில் அமைக்கப்படும். காங்கிரசை பொறுத்தவரை வரும் தேர்தலில் லஞ்சம் லாவண்யம் மிக்க ஜெயலலிதா அரசை தோற்கடிப்பதற்காக இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் களத்தில் இறங்குவோம். காங்கிரஸ் - திமுக கூட்டணி, வலுவான கூட்டணி. இந்த கூட்டணி ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பும். காங்கிரஸ் கட்சியின் நோக்கமே ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான். திமுகவும் அதே நிலைபாடில் தான் இருக்கிறது.
இப்போது நாங்கள் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்துள்ளோம். ஜெயலலிதாவை கண்டிப்பாக தோற்கடிப்போம். இலங்கை தமிழர்கள் பற்றிய வரலாறு தமிழிசை சவுந்தரரராஜனுக்கு தெரியாது. 120 ஆண்டு காலமாக இலங்கை தமிழர்களுக்கு பல நல்ல காரியங்களை செய்த கட்சி காங்கிரஸ் கட்சிதான். அந்த தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை நேருதான் பெற்றுத் தந்தார்.
தேர்தல் குழுவில் ப.சிதம்பரம் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுகிறது. ப.சிதம்பரம் என்பவர் இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு தலைவர். பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர். அவர் இந்த சின்ன கமிட்டியில் இல்லை என்பதால் முக்கியத்துவம் இல்லை என்று கூறமுடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிதம்பரம் ஆலோசனையுடன் தான் வெளிவர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கட்சி பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர்கள் ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், கோபண்ணா, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, ரூபி மனோகரன், நாஞ்சில் பிரசாத், சுமதி அன்பரசு, எம்.எஸ்.திரவியம், பி.வி.தமிழ்செல்வன், தாஸ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.