சென்னை: வலி நிவாரணி, சளி, இருமல், நோய் எதிர்ப்பு மருந்துகள், குறிப்பிட்ட சர்க்கரை நோய் மருந்துகள், சிகிச்சைக்கு உரியதாக இல்லாத மருந்துகள், எவ்வித பயனும் இல்லாத மருந்துக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளை கொண்ட மருந்துக்கள் என 344 மருந்துகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தென்னிந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘மத்திய அரசு 344 மருந்துகளுக்கு அண்மையில் தடை விதித்துள்ளது.
இந்த மருந்துக்கள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாங்களும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். இந்நிலையில், முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், முறையான விசாரணை செய்யாமல் இந்த மருந்துகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு இந்த ஐகோர்ட் தடை விதிக்க வேண்டும். மத்திய அரசு உத்தரவை ரத்தும் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மருந்து பொருட்களுக்கு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது. அதேநேரம், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில், மருந்து உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது. இதுகுறித்து 4 வாரத்துக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.