கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, இடதுசாரி முன்னணி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 6 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 4ம் தேதியன்று முதல்கட்ட தேர்தல் தொடங்குகிறது. இதையொட்டி, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடனேயே வேட்பாளர் பட்டியலை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இடதுசாரிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள இடதுசாரிகள், அதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் சுமூகமான முடிவு எட்டப்படும் என தெரிகிறது.இந்நிலையில், இடதுசாரி முன்னணி 16 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைய பாடுபடுவது, ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஆளும் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்க மக்கள் முன்வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும், வறுமையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பொதுவிநியோக திட்டம் மேம்படுத்தப்படும்.
தொழிற்சாலைகள் மூடப்பட்டால் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்காதவண்ணம் அவர்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத்தொகை மற்றும் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். மகளிர் ஆணையம், லோக் ஆயுக்தா, மாநில மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசியல் காரணங்களுக்காக உள் நோக்கத்துடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். காவல்துறை நடுநிலையுடன் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலம் கையகப்படுத்தப்படும்போது அதற்கு உரிய விலை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், நிலம் கொடுத்தவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 20 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.தேர்தல் அறிக்கையை வெளிட்டபின் இடதுசாரி முன்னணி தலைவர் பீமன் போஸ் கூறுகையில், ‘‘திரிணாமுல் ஆட்சி அகற்றப்பட வேண்டும். மதசார்பற்ற ஜனநாயக அரசு அமைய மக்கள் ஒருங்கிணைய வேண்டும். ஜனநாயகம், சட்டம்-ஒழுங்கு, கருத்து சுதந்திரத்தை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்’’ என்றார்.