சிரியாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது
டமாஸ்கஸ்: ஐநா சபையின் தீவிர முயற்சிக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ரஷ்யா கையெழுத்திட்டன.சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத் பதவி விலக கோரி, பல்வேறு குழுக்கள் போரிட்டு வருகின்றன. இதற்கிடையே ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். சிரியாவின் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் பொது இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துகின்றனர்.
தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகள் முகாமிட்டு ராணுவத்துக்கு உதவி செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய படைகளும் சிரியாவில் தாக்குதல் நடத்துகிறது. தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து வான்வழி தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டது. உள்நாட்டு போரினால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் இதுவரை சுமார் 2.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதுடன், அங்கு வாழ்வதற்கான சூழல் இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில், சிரியாவில் அமைதியை நிலைநாட்ட ஐநா சபை முயற்சி செய்தது. இதுதொடர்பாக, பல்வேறு குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
சிரியாவில் போரை நிறுத்த அமெரிக்கா, ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்தது. இருநாடுகளும் இதற்கு சம்மதம் தெரிவித்தன. போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் சிரியாவில் சண்டை ஓய்ந்தது. முக்கிய நகரங்கள் அமைதியாக காட்சி அளித்தன. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என ரஷ்யா அறிவித்துள்ளது.