குடிப்பழக்கம், வறுமையால் நடந்த விபரீதம் - 4 மகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி
10/21/2016 2:44:53 PM
தேன்கனிக்கோட்டை, -தேன்கனிக்கோட்டை அருகே வறுமை காரணமாக பெண் ஒருவர் தன்னுடைய 4 மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் மாரிமுத்து (45). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரத்தினம்மா (35). இவர்களுக்கு மகேஸ்வரி (13), ஆஷா (11), பூஜா (9), பூர்ணிமா (6) என்ற 4 மகள்கள் உள்ளனர். மாரிமுத்துவிற்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
மேலும் போதிய வருமானம் இல்லாததால் உணவின்றி தவித்தனர். நேற்று கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ரத்தினம்மா மனமுடைந்த நிலையிலேயே இருந்து வந்தார். போதிய வருமானமில்லாதது, கணவரின் குடிப்பழக்கம், 4 பெண் குழந்தைகள் போன்றவை ரத்தினம்மாவை தற்கொலைக்கு தூண்டியது. நேற்று அவர் தன்னுடைய 4 மகள்களுக்கும் பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேன்கனிக்கோட்டை போலீசார் மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையால் தத்தளித்த தாய், மகள்களுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.