போலீசார் வாகன சோதனையில் செங்குன்றம் ரவுடி சிக்கினார்
10/21/2016 2:34:10 PM
புழல், -சென்னை செங்குன்றம் அருகே திருவள்ளூர் சாலை ஆலமரம் பகுதியில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபர் போலீசாரை கண்டதும் திரும்பி வேகமாக சென்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.அவரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
பிடிபட்ட நபர் செங்குன்றம் அடுத்த பாலமுருகன் நகர், ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாலா (எ) பாலசுப்பிரமணி (37), அவர் மீது நல்லூர், பெருமாள் அடிபாதம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முத்துபிரகாஷ், 2015ம் ஆண்டு நல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் ஆகியோரை கொலை செய்த வழக்கு உள்பட பல்வேறு வழிப்பறி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் தேடிவந்தபோது பாலா தலைமறைவாக இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.