தீபாவளியை கொண்டாட மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வாலிபர்கள்
10/21/2016 2:30:11 PM
திருச்செங்கோடு, -நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ராயர்பாளையம் நெடுங்காட்டைச் சேர்ந்தவர் பாவாயி (70), தனியாக வசித்து வந்தார். கடந்த 18ம் தேதி இரவு பாவாயி கொலை செய்யப்பட்டார். வீட்டிலிருந்த 2 தங்க மோதிரம் மற்றும் ₹2 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், ராசிபுரம் தொப்பப்பட்டியை சேர்ந்த 19, 17 வயதான 2 வாலிபர்களை கைது செய்தனர். கைதான 19 வயது வாலிபர் அளித்த வாக்குமூலம்: ராசிபுரம் நகரில் டூவீலர் ஷோரூமில் வேலை செய்து வந்தேன். தற்போது அங்கிருந்து நின்றுவிட்டேன். இதனால் பணம் இல்லாமல் தடுமாறினேன். இதனால், தீபாவளியை சிறப்பாக கொண்டாட, எனது நண்பருடன் (17 வயது வாலிபர்) சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டேன். மூதாட்டி பாவாயி தனியே வசிப்பதை அறிந்து, அவரை கொலை செய்து கொள்ளையடிக்க முடிவு செய்தோம்.
சம்பவத்தன்று இரவில், இருவரும் அங்கு சென்றோம். மாட்டுத்தொழுவத்தில் இருந்த பாவாயியை முகத்தை அமுக்கி, வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டிலில் போட்டோம். அப்போதும் அவருக்கு மூச்சு இருந்ததால், எனது நண்பர் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் வீட்டிலிருந்த 4 கிராம் மற்றும் 6 கிராம் தங்க மோதிரம், ரொக்கம் ₹ 2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் தப்பினோம். ஆளுக்கு ஒரு மோதிரமும், ₹ஆயிரமும் எடுத்துக் கொண்டோம். திருடிய பணத்தில் மது குடித்தோம். ஆனால், போலீசில் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இருவரையும் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின்பேரில், 19 வயது வாலிபரை சேலம் கூர்நோக்கு இல்லத்திலும், 17 வயது வாலிபரை பரமத்தி இளங்குற்றவாளிகள் சிறையிலும் அடைத்தனர்