அக்காவை அழைத்து வராததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
10/20/2016 2:55:16 PM
வேளச்சேரி, -சென்னை தரமணி, தாமிரபரணி தெருவை சேர்ந்தவர் ராஜப்பன். டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகள் அஜிதா (21) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர்கள் இருவரும் மற்றொரு பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.ராஜப்பனின் இரண்டாவது மகள் அமுதா (18). பிளஸ் 2 படித்து வந்தார். தனது அக்காவின் மேல் உள்ள பிரியத்தினால், அவரை வீட்டுக்கு அழைத்து வருமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். எனினும், அவர்கள் மூத்த மகளை வீட்டுக்கு அழைத்து வர மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், தான் இறந்த பிறகாவது தனது அக்காவை பெற்றோர் அழைத்து வரலாம் என்று அமுதா நினைத்தார். அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டு உத்திரத்தில் அமுதா தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் கிடந்தார். அப்போது எதேச்சையாக எழுந்த ராஜப்பன், தனது மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் ராஜப்பனும் லட்சுமியும் மகளை கீழே இறக்கிப் பார்த்தபோது, அவர் இறந்து போயிருப்பது தெரியவந்தது.