பஸ்சில் வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - துப்பாக்கி சந்தையாக மாறுகிறது தமிழகம் ; சென்னையில் ஒருவர் கைது: வேலூர் வாலிபருக்கு வலை
10/20/2016 2:50:42 PM
சென்னை, - சாத்தூரில் கடந்த வாரம் ஓடும் பஸ்சில் வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு துப்பாக்கி கொடுத்த நபரை சென்னையில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் வேலூரில் துப்பாக்கி வாங்கியது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் தமிழகம் துப்பாக்கி விற்பனை செய்யும் சந்தையாக மாறுவது தெரிய வந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த கருப்பசாமி, கடந்த 12ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓடும் பஸ்சில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த சி.டி. கடை அதிபர் முகமது ரபீக்(45) என்பவர் மதுரை ஜேஎம்-3 கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரது மகன் அப்துல்லா கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக கருப்பசாமி கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அப்துல் ரபீக்கை கைது செய்ததுடன் அவர் வைத்திருந்த துப்பாக்கியைும் போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது ரபீக்கை 4 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கருப்பசாமி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வாங்கியதாக தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் தனிப்படையினர் நேற்று சென்னை விரைந்து கொடுங்ைகயூர் விவேகானந்தா நகர் நக்கீரன் தெருவை சேர்ந்த ராபர்ட் கென்னடி(42) என்பவரை கைது செய்தனர். இவர், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். பர்மா பஜாரில் கடை வைத்திருந்தபோது, ரபீக்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கொலைக்காக கென்னடிதான் ரபீக்கிற்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் ரபீக்கிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஒருவரிடம் துப்பாக்கி வாங்கியது தெரியவந்துள்ளது. இதனால் அம்பூர் துப்பாக்கி வியாபாரியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னை திருவான்மியூரில் கந்தன் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாபலிபுரத்தில் சென்னை வக்கீல் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோவையில் பிரபல ரவுடி மோகன்ராம் தலைமையிலான கும்பல், 3 பேரை சுட்டுக் கொன்றது. தற்போது மோகன்ராம் மும்பையில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் பிரபல ரவுடி சி.டி.மணி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டான். தற்போது அவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், அவனிடம் தற்போது நவீன ரக துப்பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் சில நாட்களுக்கு முன் டாக் ரவி என்ற ரவுடி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டான். இவ்வாறு தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகளிடம் தற்போது துப்பாக்கி புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வடமாநில துப்பாக்கி வியாபாரிகள் தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்யும் ஆயுத வியாபாரிகளுடன் கை கோர்த்துக் கொண்டு துப்பாக்கியை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
நக்சலைட்டுகளுடன் தொடர்பு?
“துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் தற்போது போலீசுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் ரவுடிகளை கைது செய்வதோடு அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதோடு, துப்பாக்கி கலாச்சாரத்துக்கும் போலீசார் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில் கென்னடிக்கு எப்படி துப்பாக்கி வியாபாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது, அவருக்கும் நக்சலைட்டுகளுக்கும் பழக்கம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.