மறைமுக வாசகங்கள் மூலம் பிரிந்த கணவரை விமர்சித்த அமலா பால்
10/20/2016 2:11:07 PM
நடிகை அமலாபால், இயக்குனர் விஜய் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை யடுத்து விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர். இருவரும் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். திருமண முறிவு எந்த வகையிலும் தங்களை பாதிக்காத வகையில் இருவருமே அவரவர் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர். சமீபத்தில் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி படம் திரைக்கு வந்தது. அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் குமரிகண்டம் படம் இயக்குகிறார். அமலாபால், வட சென்னை படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பதுடன் கன்னடத்தில் 2 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் தோழிகளுடன் அடிக்கடி ஜாலி டூர் புறப்பட்டு விடுகிறார் அமலாபால். சமீபத்தில் காஷ்மீர் சென்ற அவர் ஊரை சுற்றிப்பார்த்தார். அருவி பகுதிகளுக்கு சென்று தோழியுடன் விதவித கோணங்களில் புகைப்படம் எடுத்து அதனை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். ‘நோ லுக்கிங் பேக்’ (திரும்பி பார்க்க மாட்டேன்) என்ற வாசகத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அதனுடன் ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் ‘டேக் தி லீட்’ (தலைமை தாங்கு) என்ற விளக்கவுரையையும் பிரதி எடுத்து வெளியிட்டிருக்கிறார். ‘உன் வாழ்க்கை எப்படி செல்ல வேண்டும் என்பதை நீ தேர்வு செய். உன் இதயத்தை தன் நெஞ்சில் தாங்கி இருக்கும் ஒருவரை தவிர வேறு யாரையும் உன்னைபற்றிய முடிவுகளை எடுக்க அனுமதிக்காதே...’ என அந்த உரை நீள்கிறது. இது எல்லாமே மாஜி கணவர் விஜய்யை சுட்டிக்காட்டியே அவர் செய்வதாக முணுமுணுக்கப்படுகிறது.