திருப்போரூரில் அனைத்து சுவர் விளம்பரங்களும் அழிப்பு
10/1/2025 11:56:04 AM
திருப்போரூர்: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல் காரணமாக, தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி சுவர் விளம்பரம், தேர்தல் பிரசார சுவரொட்டி விளம்பரம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்போரூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் குறித்த விளம்பரங்கள், அனைத்துக் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் இருப்பதாக தேர்தல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அலுவலருமான சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், நேற்று இப்பகுதிகளில் அனுமதியின்றி எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.உள்ளாட்சி தேர்தல் குறித்து பேரூராட்சி பகுதியில் எந்த சுவர் விளம்பரங்களும் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு மீறி சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டால் அந்த தொகையானது சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என செயல் அலுவலர் சரவணன் தெரிவித்தார்.