உள்ளாட்சி தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
9/30/2016 2:59:51 PM
சென்னை, -உள்ளாட்சி தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் வாகனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுசம்பந்தமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் நடைபெறும் காலங்களிலும், தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரையிலும் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்குவதற்கான தடையினை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக விரோதிகளை கண்காணித்து தேவைப்படும்போது சட்டத்திற்குட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வாக்காளர்கள் சுதந்திரமாகவும, நியாயமாகவும் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
தேர்தல் காலங்களில் அனுமதிபெறாத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் விரிவாக விவாதிக்க வேண்டும். குற்றப் பின்னணி உடையவர்கள் மீதும், ஏற்கனவே தேர்தல் காலங்களில் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே, 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 பிரிவின்படி ஆயுதங்கள் எடுத்துச் செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரையில் இத்தடை உத்தரவு நடைமுறையில் இருக்க வேண்டும்.‘
தேர்தல் நாளுக்கு முந்தைய 3 நாட்களிலிருந்து இலகுரக வாகனங்கள், லாரிகள் ஆகியவற்றை முழுமையான சோதனை செய்வதன் முலம் மாவட்டத்தில் கடுமையான கண்காணிப்பினை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் தேர்தல் நடத்தப்படும் பகுதிகளில் விரும்பத்தகாத சமூகவிரோதிகள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வாகனங்களில் கொண்டு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆயுதங்கள் கொண்டு செல்ல பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ஆணையின் நகல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடையே, சிறப்பான புரிந்துணர்வும், ஒத்துழைப்பும், தகவல் பரிமாற்றமும் இருக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
மேலும், பொதுமக்களிடையே நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்யும்பொருட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களிடையே நட்புணர்வும், நேர்மறையான எண்ணங்களும், முழுமையான நம்பிக்கையுடன்கூடிய அணுகுமுறையும் இருக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.