மகாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர் - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
9/30/2016 2:58:41 PM
சென்னை, -மகாளய அமாவாசையையொட்டி இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபட்டனர். இன்று மகாளய அமாவாசை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உறவினர்கள், தங்களது முன்னோர்களுக்கு கோயில் குளம், கடற்கரையில் திதி கொடுத்தனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் மகாளய அமாவாசை வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் திதி கொடுக்க தமிழகம், ஆந்திரா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கோயில் தெப்பக்குளக்கரையில் இன்று காலை புனித நீராடி, குளக்கரையில் உள்ள புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு சென்று மூலவர் வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் குவிந்ததால் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருச்சி ரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றின் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தி வருவதால் அம்மாமண்டபம் படித்துறை கூட்ட நெரிசலாக காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரியாற்றில் புஷ்பமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் அமாவாசையை முன்னிட்டு நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஐயாறப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சுவாமி கிழ வீதி, ேமலவீதி, தெற்கு, வடக்கு வீதிகளில் வீதியுலா சென்று கோயிலை அடைந்தது. இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கும்பகோணம் மகாமக குளத்தில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். திருவாரூர் தியாகராஜர் கமலாலய குளத்தில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். நாகை மாவட்டத்தில் கோடியக்கரை கடல், வேதாரண்யம் கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் வேதாரண்யேஸ்வரரை வழிபட்டனர். வழக்கமாக வேதாரண்யம் பக்தர்கள் கடற்கரை, மணிகர்ணை தீர்த்தத்திலும் நீராடி அங்கும் திதி கொடுப்பார்கள். கோயிலில் உடைமாற்ற ஏற்பாடு செய்யாததால் உடைமாற்ற சிரமப்பட்டனர். பூம்புகார் கடற்கரையில் ஏராளமானோர் திதிகொடுக்க அதிகாலையே குவிந்தனர். காவிரி, கடலும் சங்கமாகும் இடத்தில் புனித நீராடி புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கடற்கரையில் உள்ள ரத்தினபுர்னேஸ்வரி அம்மனை தரிசித்தனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் இன்று காலை ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, புனித நீராடினர். நேற்று இரவு முதலே ராமேஸ்வரத்துக்கு பக்தர்கள் வரத் துவங்கினர். இன்று அதிகாலை 5 மணி முதல் அக்னிதீர்த்தக் கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடினர்.
பின்னர் நீண்டவரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி கோயிலிலுள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.இதுபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை சேது தீர்த்தக்கடல் பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோரை வழிபட்டனர்.