நயன்தாராவுக்கு முக்கியத்துவம்? அதர்வா அச்சம்
9/30/2016 2:24:35 PM
ஹீரோக்களுக்கு ஜோடிபோடும் கதாபாத்திரங்களைவிட ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களையே சமீபகாலமாக தேர்வு செய்கிறார் நயன்தாரா. மாயா, நானும் ரவுடிதான் என அவர் நடித்த பல படங்களும் அடுத்தடுத்து நடிக்கும் படங்களும் இந்த பாணியிலேயே அமைந்திருக்கிறது. அதர்வா ஹீரோவாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இவரை அழைத்து கதை கேட்டு நடிக்க ஓ.கே சொன்னார் அதர்வா. ஜோடியாக ராசி கண்ணா ஒப்பந்தம் ஆனார்.
துப்பறியும் அதிகாரி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபுதேவா உள்ளிட்ட சிலரிடம் பேசப்பட்டது. கடைசியாக நயன்தாராவிடம் கதையை கூறியபோது நடிக்க சம்மதித்தார். ஏற்கனவே சண்டை காட்சிகளில் நடிக்க நயன்தாரா பயிற்சி பெற்றிருப்பதால் இது அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று பட குழுவும் எண்ணியது. அவர் நடிக்க சம்மதித்தவுடன் படம் பற்றிய தகவல்களில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதாம். அதர்வாவுக்கு ஜோடியாகவும் நயன்தாரா நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் அதர்வாவுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அவருக்கு இப்படத்தை அதர்வா படம் என்று சொல்வார்களா? நயன்தாரா படம் என்று சொல்வார்களா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம். அக்டோபரில் இதன் படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் குழப்பத்துக்கான தீர்வை எட்ட பட குழுவினர் ஆலோசித்து வருகிறார்களாம்.