₹1.50 கோடி எரி சாராயம் லாரியுடன் பறிமுதல்
9/21/2016 3:23:12 PM
பள்ளிகொண்டா, -வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே சென்னையை சேர்ந்த நீலகண்டன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக வாணியம்பாடி கலால் துறை போலீசாருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று குடோனை சோதனை செய்தனர். அங்கு நின்றிருந்த லாரியில் போலீசார் சோதனை செய்தபோது, அதில் கேன்களில் எரிசாராயம் இருந்தது தெரிந்தது.
இதுகுறித்து வாணியம்பாடி கலால் துறை இன்ஸ்பெக்டர் நிஷா பார்த்திபனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த அவர் குடோன் பாதுகாவலர் கார்த்திக் என்பவரிடம் விசாரணை நடத்தினார். அனங்காநல்லூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், லாரியில் சமையல் எண்ணெய் இருப்பதாகவும், கர்நாடக மாநிலத்தில் கலவரமாக இருப்பதால் சிறிது நாட்கள் இந்த எண்ணெய் கேன்களை குடோனில் வைத்துக்கொள்வதாகவும் கேட்டதால், அவரிடம் குடோன் சாவியை தந்ததாக கார்த்திக் கூறினார்.
இதையடுத்து லாரியுடன் எரிசாராய கேன்களை கலால் துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள புருஷோத்தமனை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ₹1.50 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.