16வது நாளாக பஸ்கள் ஓடவில்லை - அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினசரி ₹25 கோடி இழப்பு
9/21/2016 3:19:45 PM
ஓசூர், -கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிடும் விவகாரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இரு மாநிலத்துக்கும் இடையே பஸ் மற்றும் லாரி போக்குவரத்து முடங்கி போயுள்ளது. தமிழக, கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினசரி ₹25 கோடி வரை யில் வசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகரில் இருந்து கடந்த 5ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அங்குள்ள கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 12ம் தேதி பெங்களூரில் கலவரம் ஏற்பட்டது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.
தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட 910 பஸ்களும், ஓசூர் வரை மட்டுமே இயக்கப் படுகிறது. அங்கிருந்து ஓசூர் எல்லையான ஜூஜூவாடி வரையில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. 4 கி.மீ. தூரம் நடந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளிக்கு செல்லும் மக்கள், பின்னர் அம்மாநில பஸ்கள் மூலம் பெங்களூரு, மைசூரு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இரண்டு மாநிலத்திற்குள்ளும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இரு மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படாததன் மூலம் தினசரி ₹25 கோடி வரையில் கட்டண வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ``ஓசூரில் இருந்து பெங்களூருக்கு, சேலம் கோட்டம் மூலம் தினசரி 55 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம், தினசரி ₹ 10 லட்சம் வசூல் கிடைக்கும். தற்போது ஓரிரு பஸ்கள் மட்டுமே ஜூஜூவாடி வரை இயக்கப் படுகின்றன. வௌிமாவட்டங்களில் இருந்து 900 பஸ்கள் வரை பெங்களூருக்கு இயக்கப்பட்டது. காவிரி பிரச்னையால் 15 நாட்களாக போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழக-கர்நாடக போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி ₹25 கோடி வரையில் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.