கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை
9/21/2016 3:16:37 PM
கும்மிடிப்பூண்டி, -கும்மிடிப்பூண்டி அடுத்த எலாவூர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (28). தனியார் கம்பெனி கார் டிரைவர். இவரது மனைவி ஷோபா (எ) முத்துபேச்சி (24). இவர்களுக்கு அக்ஷயா (6), ரூபன் (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
அழகர்சாமியின் மனைவி ஷோபா தனது 2 குழந்தைகளுடன் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தனது கணவர்தான் வந்துவிட்டார் என ஷோபா கதவைத் திறந்தார்.
அப்போது வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்து நின்றிருந்த 2 பேர் ஷோபாவை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு ஷோபாவிடம் ஒருவன் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை எடுக்கும்படி கூறினான். மற்றொருவன் 2 குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான்.
இதனால் பயந்து போன ஷோபா, பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகளையும் 50 கிராம் வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்களிடம் எடுத்து கொடுத்தார். பின்னர். அவர்கள் இருவரும் ஷோபாவின் வாயில் துணியை வைத்து அடைத்து, அவரது கைகளையும் பின்னால் கட்டிவிட்டு, அங்கிருந்து இருளில் தப்பி சென்றனர்.
பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் அழகர்சாமி வீடு திரும்பியதும் தனது மனைவி ஷோபா கயிற்றால் கட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் மனைவியின் கட்டுகளை அவிழ்த்ததும் கொள்ளை சம்பவம் குறித்து கூறினார்.
இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அழகர்சாமி புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.