சென்னை பல்கலையில் விடைத்தாள் வாங்குவதில் தாமதம் - செமஸ்டர் தேர்வு தள்ளிப்போகும் அபாயம்
9/21/2016 3:14:13 PM
சென்னை, - சென்னை பல்கலைகழகத்தில் துணை வேந்தர் நியமிக்கப்படாததால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. விடைத்தாள் அச்சிட உத்தரவிடும் ஆவணம் உயர்கல்வித்துறை அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.சென்னை பல்கலைகழகம் 1857ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பல்கலைகழகம். பல்கலைகழகத்தின்கீழ் 134 இணைவு கல்லூரிகளும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற 23 கல்லூரிகளும் உள்ளன. இந்த பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் ஜனவரி மாதம் முடிந்துவிட்டது. அதன்பின் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் துணை வேந்தரின் பணிகளை மேற்கொள்ள உயர்கல்வித்துறை செயலாளர், பல்கலைகழக பதிவாளர் உட்பட பலர் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பல்கலைகழகம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த குழுவே எடுக்கும். இதனால் பல்கலைகழகத்தில் ஏராளாமான ஆவணங்கள் கையெழுத்தாககாமல், பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.
சென்னை பல்கலைகழகத்தின் தொலைதூரக்கல்வி மையத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 29ம் தேதி தேர்வுகள் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடக்க உள்ளது. சென்னை பல்கலைகழகம், உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடக்க உள்ளது. இதற்காக பணிகளை தொடங்குதல், விடைத்தாள் அச்சிட உத்தரவிடுதல் ஆகியவை செப்டம்பர் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் விடைத்தாள் அச்சிட உத்தரவிடுவது தொடர்பான ஆவணம் தலைமை செயலகத்தில் உள்ள உயர்கல்வித்துறை அலுவலகத்தில் இன்னும் கையெழுத்தாகாமல் நிலுவையில் உள்ளது. இதனால் அடுத்த மாதம் தொடங்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் காலதாமதமாக தொடங்கப்படலாம் என்று பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர் கூறினார்.