காப்பகத்தில் மீட்கப்பட்ட 63 பேரில் 21 சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு - திருவள்ளூர் கலெக்டர் தகவல்
9/21/2016 3:12:09 PM
திருவள்ளூர், -திருவள்ளூர் அருகே அனுமதியின்றி செயல்பட்டுவந்த காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 63 சிறுவர்களில், 21 சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.திருவள்ளூர் அருகே உள்ளது தேவந்தவாக்கம் கிராமம். இங்கு உமா என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து, சிறகுகள் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். தரை தளத்தில் அரசு அனுமதி இன்றி உயர்நிலைப் பள்ளியும் நடத்தி வந்தார். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயங்கி வந்த இப்பள்ளி குறித்து திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லிக்கு புகார் சென்றது.
கலெக்டர் உத்தரவின்படி, நேற்று அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ‘சிறுவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறை என எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் பழவேற்காடு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்களை, குறுகிய அறைகளில் அடைத்து வைத்து, சோலார் மின்வேலி அமைத்திருந்தனர்.
இதையடுத்து, காப்பகத்தில் இருந்து 63 மாணவ, மாணவிகளை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவர்களை பஸ்கள் மூலம் திருவள்ளூர் அருகே உள்ள சிறுவானூர் ஆசிர்வாத் ஆசிரமத்திற்கு கொண்டு வந்து தங்க வைத்தனர்.இதுகுறித்து கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 21சிறுவர்களை அவர்களது பெற்றோர்களிடம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 38 சிறுவர்களை அம்மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற சிறுவர்களை அவர்களது பெற்றோர் விரும்பினால் அவர்களிடம் ஒப்படைக்கவும், இல்லையேல் பதிவுப்பெற்ற குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய வசதிகள் இன்றியும், பதிவு செய்யப்படாமல் இயங்கும் இல்லங்களை கண்டறிந்து மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.