கர்ப்ப கால பிரச்னைகளை போக்கும் இஞ்சி, புதினா, எலுமிச்சை
9/21/2016 3:04:09 PM
இளம் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து இன்றைய நாட்டு மருத்துவத்தில் தெரிந்து கொள்வோம். பொதுவாக இளம் தாய்மார்கள், கருவுற்ற பெண்களுக்கு காலைநேரங்களில் குமட்டல், வாந்தி, மயக்கம், களைப்பு, பசியின்மை போன்ற பல பிரச்னைகள் இருக்கும். கர்ப்பிணிகளின் மார்னிங் சிக்னஸ் எனப்படும் இந்த பிரச்னைகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சில மருந்துகள் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்- இஞ்சி, புதினா, தேன், எலுமிச்சை சாறு. முதலில் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் அரை டீஸ்பூன் அளவு இஞ்சிச்சாறு, புதினா சாறு கலந்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து வடிகட்டி காலை நேரங்களில் குடித்துவர இப்பிரச்னைகள் நீங்கும். விருப்பப்பட்டால் தேன் சேர்க்காமலும் இதனை குடித்து வரலாம். பிள்ளைப்பேறு முதல் பிரசவகாலம் வரை பெண்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக மனதளவில் அச்சம் ஏற்படும். இந்த நேரத்தில் ஊட்டச்சத்தான உணவு அவசியமாகிறது. இதற்கு இஞ்சி, புதினா ஆகியவை மிக முக்கியமான மருந்தாகிறது. இவற்றிற்கு வயிற்றில் சுரக்கும் அமிலத்தன்மையை போக்கும் தன்மை உண்டு. இவற்றை கொண்டு தயாரிக்கும் கஷாயம் சிறந்த மருந்தாகிறது. இதற்கு தேவையான பொருட்கள். இஞ்சி, புதினா, பனங்கற்கண்டு. இஞ்சி, புதினா இவற்றை கழுவி சுத்தம் செய்து அரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர குமட்டல் வாந்தி நிற்கும். உடலில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சில ெபாதுவான பிரச்னைகளை போக்கும் தன்மை இஞ்சி, புதினா, எலுமிச்சை, கொத்துமல்லி, சோற்றுகற்றாழை போன்றவற்றிற்கு உண்டு. இனி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கை கால் வீக்கம் மற்றும் முக வீக்கத்துக்கு மருந்து தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம். தனியா அல்லது கொத்துமல்லிக்கு உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும் தன்மை உண்டு. இதற்கு பச்சை கொத்துமல்லி அல்லது தனியா சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். இவற்றை கொதிக்க வைத்து அதனை வடிகட்டி அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கை கால் முக வீக்கம் கட்டுப்படும். அடுத்து கர்ப்பிணிகளுக்கு உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புக்கான பசை தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: ஆலு வேரா எனப்படும் சோற்றுக்கற்றாழை பசை சிறிதளவு, தேங்காய் எண்ணை மற்றும் சீரகம். ஒரு கடாயில் சிறிதளவு சோற்றுக்கற்றாழை பசை சேர்த்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணை மற்றும் சீரகம் சேர்த்து சிறுதீயில் வைத்து பசை பதத்தில் காய்ச்சவும். அதனை ஆறவைத்து உடலில் அரிப்பு, எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வர இப்பிரச்னை தீரும். சோற்றுக்கற்றாழை உள்பசையை அப்படியே எடுத்தும் தடவிவரலாம். இத்தகைய நாட்டு மருத்துவத்தை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டே தேவைப்படும் நேரங்களில் செய்து கொடுக்கலாம்.