கொரட்டூரில் வசதிகள் இல்லாத பஸ் நிலையம் - கிடப்பில் கிடக்கும் சுரங்கப்பாதை திட்டம்
9/21/2016 3:03:39 PM
கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 1975-ம் ஆண்டு பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது. இங்கிருந்து பெசன்ட் நகர், தி.நகர், பாரிமுனை, மதுரவாயல், அண்ணா சதுக்கம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ் சர்வீஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி கொரட்டூர் பகுதிகளான வெங்கட்ராமன் நகர், தில்லை நகர், அக்ரகாரம், சுப்புலட்சுமி நகர், சிவலிங்கபுரம், அன்னை நகர், லேக்வியூ கார்டன், வி.எஸ்.அவென்யு, திருமலை நகர், தென்றல் அவென்யு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த பஸ் நிலையத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக, பஸ்நிலைய மேற்கூரை, பயணிகளுக்குத் தேவையான இருக்கை, கழிப்பறை, குடிநீர், விளக்குகள், நேர காப்பாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.மேலும், இங்கு பஸ்கள் சென்று வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகையும் கிடையாது. இதனால் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்
.
இதையடுத்து, கடந்த ஆட்சிக் காலத்தில், அம்பத்தூர் எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹52 லட்சம் செலவில் கொரட்டூர் பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் துவங்கியது. ஆனால், அவற்றில் பஸ் நிலையத்தின் மேற்கூரை பணி மட்டுமே முடிந்துள்ளது.ஆனால், பயணிகளுக்கான இருக்கை, குடிநீர், கழிப்பறை, நேர காப்பாளர் அறை உள்ளிட்ட வசதிகள் இன்னும் நிறைவு செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர கோலத்தில் காணொலி காட்சி மூலம் பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
எனினும், இன்றுவரை இந்த பஸ் நிலையத்துக்கு மின் இணைப்புகூட கொடுக்கப்படாததால் இரவு நேரங்களில் பல்வேறு வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு இருக்கை வசதி இல்லாததால், பகல் நேரங்களில் மக்கள் வெயிலில் பஸ்சுக்காக கால் கடுக்க நின்று அவதிப்படுகின்றனர்.இங்கு பயணிகளுக்கு தேவையான கழிவறை இல்லாததால், அங்கு வரும் பயணிகள் பஸ் நிலையத்தை சுற்றிலும் அசுத்தப்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பஸ் நிலையத்தை பல கடைகளும் தனியார் வாகனங்களும் ஆக்கிரமித்து உள்ளன.இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து உயர் அதிகாரிகளும் தமிழக அரசும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேபோல், சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை பயன்படுத்தி கொரட்டூர் பகுதிகளான வெங்கட்ராமன் நகர், தில்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் இதுவரை பயணிகளுக்குத் தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. உதாரணமாக, இங்கு 2 டிக்கெட் கவுன்டர்கள் இருந்தும் ஒன்று மட்டுமே இயங்கி வருகின்றன. மற்றொன்று பூட்டியே கிடக்கிறது.
மேலும், கொரட்டூர் ரயில்வே கேட் அதிக ரயில் வரத்தினால் அடிக்கடி மூடப்படுவதால், அங்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதைத் தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட சுரங்கப்பாதை பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டு அவ்வப்போது மந்தகதியில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் இப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் பல கிமீ தூரம் சுற்றிவர வேண்டியுள்ளது.மேலும், இங்கு ரயில்வே கேட் பகுதியில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இங்கு அடிக்கடி செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையத்திலும் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், அங்கு இரவு நேரங்களில் தனியாக செல்லவே பெரும்பாலான மக்கள் அச்சப்படுகின்றனர்.எனவே, கொரட்டூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்குத் அடிப்படை வசதிகளையும், இங்கு சுரங்கப்பாதை பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும், ரயில்நிலைய பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதியை செய்து தர சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.