கர்நாடகாவில் லாரிகளுக்கு பாதுகாப்பு கோரி லாரி உரிமையாளர்கள் நாளை உண்ணாவிரதம்
9/21/2016 3:01:57 PM
நாமக்கல், -கர்நாடகாவில் லாரிகளை இயக்க பாதுகாப்பு அளிக்க கோரி, நாமக்கல்லில் நாளை லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் தமிழர்களை கன்னடர்கள் தாக்கி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகளை தீ வைத்து எரித்துள்ளனர். இதுவரை 50 பஸ்கள் மற்றும் 60க்கும் அதிகமான லாரிகள் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு இல்லாததால், தமிழக லாரிகள் கர்நாடக மாநிலத்துக்குள் செல்லவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டிரைவர்கள், கிளீனர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி கூறியதாவது: தமிழகத்தில் கர்நாடக வாகனங்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கின்றனர். அதேபோல கர்நாடகாவில் தமிழக வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்னையை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் தமிழக வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க அனுமதி கோரி, லாரி, ட்ரெய்லர், எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நாளை (22ம் தேதி) நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. காலை 8 மணிக்கு இப்போராட்டம் துவங்குகிறது. இதில் லாரி உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சங்க தலைவர் வாங்கிலி கூறினார்.