சிதம்பரம் அருகே ஊருக்குள் வலம் வரும் முதலைகள்
9/21/2016 3:01:26 PM
சிதம்பரம், -கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. தற்போது நீர் நிலைகள் வற்றி வருவதால் முதலைகள் ஊருக்குள் வந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வருகின்றன. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனத்துறையினர் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி குளத்தில் கொண்டு வந்து விடுவது வழக்கம். இதனால் ஏராளமான முதலைகள் அங்குள்ளன. வக்காரமாரி குளத்திலும் தற்போது தண்ணீர் வற்ற துவங்கியுள்ளதால் இங்குள்ள முதலைகள் மீண்டும் வெளியேற தொடங்கி விட்டன. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இங்கு பிடிக்கப்படும் முதலைகளை சென்னை முதலை பண்ணைக்கு வாகனத்தில் எடுத்து செல்ல அதிக செலவு ஆகிறது என்பதால் வனத்துறையினர் வக்காரமாரி குளத்திலேயே விட்டு செல்கின்றனர். ஆகையால் தமிழக அரசு சிதம்பரம் பகுதியில் பிடிக்கப்படும் முதலைகளை சென்னை முதலை பண்ணைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.