போலி இருடியம் மோசடி 6 பேர் சிறையில் அடைப்பு
9/21/2016 3:00:52 PM
கடவூர், -கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது மகன் ஏழுமலை. இவரிடம் வீட்டில் இருடியம் இருந்தால் பணம் புரளும் என்று தேக்கமலையை சேர்ந்த வெள்ளைச்சாமி(45), மைலம்பட்டியை சேர்ந்த அன்வர் அலி (26) ஆகியோர் தெரிவித்தனர். இருவரும் அனுப்பிய மேற்கு வங்கத்தை சேர்ந்த மோகன் ஹல்தார் (35), நிகார் மண்டல்(34), திருச்சியை சேர்ந்த செந்தில்குமார்(31), மதுரையை சேர்ந்த பாண்டியராஜா (35), வெள்ளைச்சாமி, அன்வர் அலி ஆகியோர் ஏழுமலை வீட்டில் தங்கி இருடியம் தயாரித்தனர். அதற்காக ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் தொகையை ஏழுமலை கொடுத்தார். தொடர்ந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள இருடியம் குறைந்த விலைக்கு தருகிறோம், மீதி பணத்தை உடனடியாக தருமாறு ஏழுமலையிடம் 6 பேரும் கூறி அவசரப்படுத்தினர்.சந்தேகமடைந்த ஏழுமலை, இருடியத்தை சோதித்து பார்த்ததில், இரும்பு தகட்டில் செம்பு முலாம் பூசப்பட்ட காந்தம் என்பதும், போலி இருடியம் என்பதும் தெரியவந்தது. ஏழுமலை அளித்த புகாரின்பேரில் பாலவிடுதி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்து குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.