திண்டுக்கல் அருகே 50 பேருக்கு மர்ம காய்ச்சல் - டெங்கு பீதி
9/21/2016 2:57:45 PM
கோபால்பட்டி, -திண்டுக்கல் அருகே 50 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் டெங்கு பீதியில் உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள மஞ்சள்நாயக்கன்பட்டி கிராமத்தில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்குவதால், கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி வருகின்றன. சுமார் 50 பேர் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குழந்தைகள் யோகசிட்டு (2), அஜய் (3) மற்றும் ராக்கம்மாள் (22), சிட்டுப்பிள்ளை (65) ஆகியோர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் சிலுவத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
.
ஒரு வாரத்திற்கு முன்பு, இவ்வூரின் அருகேயுள்ள சென்னப்பநாயக்கன்பட்டியில் மர்மக் காய்ச்சலால் 50 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் டெங்கு உறுதி செய்யப்பட்ட ஒரு சிறுவன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தங்கள் ஊருக்கு டெங்கு பரவுமோ என்ற பீதியில் மஞ்சநாயநாயக்கன்பட்டி மக்கள் உள்ளனர். தற்போது கிராம மக்களே ஒன்று சேர்ந்து கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.