விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியது - வீடியோ கான்பரன்சிங்கில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
9/21/2016 2:44:53 PM
சென்னை, -சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உயர்த்தப்பட்ட பாதையில் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி பயணிகளுக்கான மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மற்றொரு வழித்தடத்தடமான வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரையான வழித்தடத்தில், சின்னமலை - விமான நிலையம் வரை சுமார் 9 கி.மீ. தூரத்துக்கு உயர்த்தப்பட்ட பாதையில் ரயில் தண்டவாளம், மின்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் முடிவடைந்து தயார் நிலையில் இருந்தது. பயணிகள் சேவையை தொடங்குவதற்கு முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சனம் நாயக் தலைமையிலான குழுவினர் கடந்த ஜூலை மாதம் இந்த வழித்தடத்தில் மோட்டார் பொருத்திய டிராலியில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய 6 ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளம், மின்பாதைகள், சிக்னல் ஆகியவைகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவையை தொடங்கலாம் என்றும் அனுமதி அளித்தனர்.இதையடுத்து, விமான நிலையம் - சின்னமலை இடையே பயணிகளுக்கான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். மேலும், விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை, பரங்கிமலை ஆகிய ரயில் நிலையங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதனிடையே, காலை 11 மணிக்கு மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை விமான நிலையத்துக்கு வந்து ஓய்வு அறையில் காத்திருந்தனர். காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் 12 மணிக்கு கொடியசைத்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த போது, மத்திய அமைச்சர்கள் விமான நிலையத்தில் இருந்தபடி கொடியசைத்தனர். அதைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முதல் ரயிலை அம்சவேணி என்ற பெண் ஓட்டினார். பகல் 12.10 மணிக்கு கிளம்பிய இரண்டாவது மெட்ரோ ரயிலில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் சின்னமலை வரை பயணம் செய்தனர். சின்னமலை முதல் விமான நிலையத்துக்கான கட்டணம் ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.