உரி தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசனை
9/21/2016 2:40:44 PM
புதுடெல்லி, - உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது மற்றும் காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றது குறித்து மத்திய அமைச்சரவை இன்று ஆலோசிக்கிறது. இதில், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி முக்கிய முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. காஷ்மீர் மாநிலம், உரி நகரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள ராணுவ முகாம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். ராணுவம் நடத்திய பதிலடியில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். 18 ராணுவ வீரர்கள் இறந்த சம்பவம், நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என்ஐஏ விசாரணை: ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள், உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒருநாள் முன்பாகவே அந்த பகுதிக்குள் நுழைந்து இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், உரி தாக்குதல் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நேற்று துவங்கியது. தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், பாகிஸ்தானின் அடையாளச் சின்னங்கள் பதித்த ஆயுதங்கள், உணவு பொருட்கள், ஜி.பி.எஸ். கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடுருவல் முறியடிப்பு : உரி தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 10 தீவிரவாதிகள் நேற்று உரி பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்தனர். அப்போது அவர்கள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். உடனே நமது பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனனர். இதில் 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்ததால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரிய வந்துள்ளது.
அமைச்சரவை கூட்டம்: மத்திய அமைச்சரவை வழக்கமாக புதன்கிழமைகளில் கூடும். இன்றும் மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில், உரி முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும், மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.