இந்திரா குடியிருப்பு திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு
9/20/2016 3:07:40 PM
புதுடெல்லி,-மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது கடந்த 1985ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பெயரில் கொண்டுவரப்பட்ட இந்திரா குடியிருப்பு திட்டத்தை ரத்து செய்ய மத்திய பாஜ அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தருவதற்காக கடந்த 1985ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தது. இந்த திட்டத்துக்கு ‘இந்திரா குடியிருப்பு திட்டம்’(இந்திரா அவாஸ் யோஜனா) என பெயரிடப்பட்டது. இந்த திட்டம் இப்ேபாதும் அமலில் உள்ளது.
இந்நிலையில், தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசு, இந்திரா குடியிருப்பு திட்டத்தை வருகிற மார்ச் மாதத்துடன் நிறுத்திவிட திட்டமிட்டுள்ளது. இதற்து பதிலாக ‘பிரதமர் குடியிருப்பு திட்டம்’ என்ற பெயரில் புதிய கிராமப்புற ஏழைகள் குடியிருப்பு திட்டத்தை வருகிற அக்டோபர் மாதமே அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டம் அடுத்தமாதமே அமல்படுத்தப்பட்டாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்திரா கிராமப்புற ஏழைகள் குடியிருப்பு திட்டம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை செயல்படுத்தப்படும். அடுத்த நிதி ஆண்டு முதல் அதாவது 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய திட்டமான ‘பிரதமர் கிராமப்புற ஏழைகள் குடியிருப்பு திட்டம்’ மட்டுமே அமலில் இருக்கும். இந்திரா குடியிருப்பு திட்டம் ரத்து செய்யப்பட்டுவிடும்.வருகிற 2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகள் கட்டுவது என்பதே, பாஜ அரசு அடுத்த மாதம் கொண்டுவரும் புதிய திட்டத்தின் நோக்கமாகும்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தற்போது அமலில் உள்ள திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டுமான பணிகளை இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் முடிக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.