முற்றுப்பெறாத கேள்விகள்...
9/19/2016 2:35:54 PM
நான்கு சுவர்களுக்குள் நடந்துவிட்டால், வெளியுலகுக்கு ரகசியங்கள் தெரிந்துவிடாது என்று சிறை நிர்வாகங்கள் நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால், சமீபத்திய நிகழ்வுகளால், சிறைகளின் குட்டு அம்பலமாகிவருகிறது.
சிறைவாசிகளும் மனிதர்கள்தான். அவர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மரணமடைவதுண்டு. இதேபோல், மன உளைச்சலுக்கு ஆளாகும் சிறைவாசிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. இந்த மரணங்கள் குறித்து சிறை நிர்வாகத்தையும் தாண்டி, நீதிபதியாலோ, வருவாய் அதிகாரிகளாலோ விசாரிக்கப்படுவதற்குக் காரணம், கைதிகளின் உறவினர்களுக்கு சிறைத்துறை மீது எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் அவரை ஆயுள் தண்டனை சிறைவாசி ஒருவர் தாக்கிய சம்பவம் நடந்தது. இதில் சதி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.தற்போது, புழல் சிறையில் மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமையலறை மின்பெட்டியில் இருந்த கம்பியைக் கடித்தும், மின்சாரத்தை உடலில் செலுத்தியும் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று சிறைத்துறை நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது ஒருபுறம் இருந்தாலும், ராம்குமாரின் உறவினர்கள் தரப்பில் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘என் மகனைப் போலீசார் திட்டமிட்டு ெகான்றுவிட்டனர்’ என்று ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியுள்ளதோடு, ‘சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையையும் எழுப்பியிருக்கிறார்.
சிறைகளில் நூற்றுக்கணக்கானோர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு சிறைவாசிக்கும் பாதுகாப்பு அளிப்பது, கண்காணிப்பது என்பது இயலாத காரியம் என்று சிறைத்துறை அதிகாரிகள் சொல்லக்கூடும். ஆனால், சிறைவாசிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியது, சிறை நிர்வாகத்தின் கடமை என்பதில் எந்த ஐயமும் இல்லை.பொதுமக்களின் கூரிய பார்வையைப் பெற்ற சுவாதி கொலை போன்ற வழக்குகளில், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நடந்துகொள்ள வேண்டியதும் அதிகாரிகளின் கடமை. குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன. சட்டத்தின் மாட்சிமைதான் பெரிது.
ராம்குமார் மரணம் மீதான சந்தேகங்களைப் போக்க வேண்டியது சிறைத்துறை அதிகாரிகளின் பொறுப்பு. இதில் இருந்து அவர்கள் நழுவக்கூடாது.சில நேரங்களில், மரணம் நல்லவரையும் கெட்டவராக்கலாம். கெட்டவரையும் நல்லவராக்கலாம். சுவாதி கொலை வழக்கைப் பொருத்தவரை... முற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன. ஆனால், பதில்கள் முற்றுப்பெற்றுவிட்டன!