கொசுவை ஒழிக்கலாம்
9/12/2025 3:04:54 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் டெங்கு பீதி. நேற்று நடுபாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மன்மிதாவை(3) காவு வாங்கியிருக்கிறது. இந்த மாவட்டத்தில் மட்டும், இதுவரை டெங்குவால் இறந்தவர்கள் 10 பேர். நிலைமை விபரீதமாகிக்கொண்டிருக்கிறது. அரசு நிர்வாகம் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.திருவள்ளூர் மட்டும் அல்ல; தமிழகத்தில் நெல்லை, கோவை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு பீதி ஆட்கொண்டிருக்கிறது. குறிப்பாக, பல இடங்களில் மர்மக் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது டெங்குவாகவும் இருக்கக்கூடும்.டெங்குவை உயிர்க்ெகால்லியாக எண்ணி பீதியடையத் தேவையில்லைதான். முறையான சிகிச்சை கிடைக்காததாலும், அலட்சியம் காரணமாகவும்தான் உயிரிழப்புகள் நேர்கின்றன.
மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, ஜனவரி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை தமிழகத்தில் மட்டும், 2357 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, இது இருமடங்கு அதிகம். கடந்த 8 மாதங்களில், கேரளாவில் 5192 பேரும், கர்நாடகாவில் 3788 பேரும், மேற்கு வங்கத்தில் 5129 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொசுக்கள்தான் டெங்குவின் பிறப்பிடம். டெங்கு வைரஸ் கிருமிகளைச் சுமந்து சுற்றும் ஏடிஸ் எஜிப்தி கொசுக்கள் கடிக்கும்போது, காய்ச்சல் ஏற்படும். கடும் தலைவலி, மூட்டுவலி, உடல் அரிப்பு, கண் வலி உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளும் தென்படும். வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டால் ஆபத்தானது.
ஒரு வாரத்துக்குள் காய்ச்சல் குறைந்தால் சிக்கல் இல்லை. டெங்கு வைரஸ் ரத்தத் தட்டணுக்களை அழித்துவிடும். முறையான சிகிச்சை கிடைக்காவிட்டால், உயிரிழப்பைத் தவிர்க்க முடியாது.டெங்குவைத் தவிர்க்க, கொசுக்களைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். ஆனால், கொசுக்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஆகஸ்ட், செப்டம்பர், அக்ேடாபர் மாதங்களில் டெங்கு அதிகமாகப் பரவுகிறது. வீட்டைச் சுற்றியும், பூந்தொட்டி, அழகு ஜாடி, பயன்படுத்தப்படாத டயர், சிரட்டை, ஆட்டு உரல் போன்றவற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், தண்ணீர்த் தொட்டிகளை முறையாக மூடிவைத்தல், சாக்கடையை அடிக்கடி சுத்தம் செய்தல், தெருக்கள் சுகாதாரமாக இருத்தல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், குடிநீரில் குளோரின் கலந்து பயன்படுத்துதல் போன்றவை கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும். ஆனால், கொசுக்களை ஒழிக்கநவீனத்தொழில்நுட்பங்களையும் கடைபிடித்தாக வேண்டும்.
கொசுவை லார்வா பருவத்திலேயே தின்னும் ‘கம்பூசியா அபினிஸ்’ மீன்களை நீர்நிலைகளில் வளர்த்தல், கொசுக்களை மலடாக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேலைநாடுகளில் பின்பற்றும் யுத்திகள், கொசு உற்பத்தியை அறவே ஒழிப்பதற்குக் கைகொடுக்கும். அதேசமயம், அரசின் அர்ப்பணிப்பு, பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி கொசு ஒழிப்பு சாத்தியப்படாது.