சுடச்சுட எப்ஐஆர்
9/8/2025 5:08:51 PM
அதிகாலையில், அந்தப் பெண்ணிடம் தாலிக்கொடி பறிபோயிருந்தது. கொள்ளையர்களின் அட்டகாசங்களைக் கேள்விப்பட்டிருந்த அவருக்கு, இன்று நிஜ அனுபவம். ‘போலீஸ்ல புகார் கொடுக்கலாம்’ என்று கணவர் உள்ளிட்டோர் காவல் நிலையம் புறப்பட ஆயத்தமானபோது மறுத்துவிட்டார்.‘மொதல்ல புகாரே வாங்க மாட்டாங்க... பறிகொடுத்தவங்க கிட்டயே கேள்வி மேல் கேள்வி கேப்பாங்க... வேணாம். விட்ருங்க... இனி கவனமா இருப்பேன்...’காவல்துறை செயல்படும் விதத்தை அந்தப் பெண்ணின் வார்த்தைகள் வெளிப்படுத்தின. அனைத்துக் காவல் நிலையங்களும், காவலர்களும் அந்தப் பெண் கூறியதைப் போல் செயல்படுவதில்லைதான். மனிதாபிமானம் கொண்ட, அக்கறையுள்ள காவலர்களும், முன்னுதாரணமாக விளங்கும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும், காவல்துறை மீதான சாமானியர்களின் அவநம்பிக்கையை அகற்றுவது அவ்வளவு எளிதானதல்ல.
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை(எப்ஐஆர்)யை, பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நவம்பர் 15ம் தேதி வரை கெடு வழங்கப்பட்டுள்ளது. இது, காவல்துறையின் மீதான கறையைப் போக்குவதற்கான முதற்கட்ட அதிரடி நடவடிக்கை என்பதில் சந்தேகம் இல்லை.
அதேசமயம், சாதாரண மக்கள், காவல் நிலையங்களை நாடி வரும்போது, அவர்களது புகார்கள் உடனுக்குடன் ஏற்றுக்கொள்வது முதற்கொண்டே சிக்கல் துவங்கிவிடுகிறதே! சாமானியர்களின் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட வேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தின் அக்கறை என்பது புரிகிறது. ஆனால், புகாரையே மறுக்கும்போது அல்லது புகாரின் மீது உடனுக்குடன் செயல்படாதபோது, காவல்துறையால் தங்களுக்கு எந்தப்பலனும் இல்லை என்று அவர்கள் முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். புகார் ஏற்கப்படாதபோது, காவல் உயரதிகாரிகள், நீதிமன்றம், மனித உரிமை கமிஷன் என மனு செய்து, நீண்ட தாமதத்திற்குப் பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்யப்படும் அவல நிலை இருக்கிறது. இந்தப் போராட்டத்தைத் தாங்கக்கூடியவர்களாக திருவாளர் பொதுஜனம் இருப்பதில்லை.
ஒருவேளை, புகாரில் உண்மைத்தன்மை இல்லாவிட்டால், புகார் கொடுத்தவருக்குத் தண்டனை பெற்றுத்தரவும் காவல்துறையால் முடியும்; இதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது என்கிறபோது, புகாரையே ஏற்க மறுப்பதை எவ்வாறு நியாயப்படுத்துவது?
தமிழகத்தில் தற்போது கையால் எப்ஐஆர் எழுதப்படுவதில்லை. அனைத்தும் கணினி மூலம் தட்டச்சு செய்யப்பட்டு, நகல் எடுத்து வழங்கப்படுகிறது. இவை, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலைப்பின்னலில்(சிசிடிஎன்எஸ்) பதிவேற்றம் செய்யப்படுகிறது. தற்போது, இருநாட்களுக்குள் எப்ஐஆர் பதிவேற்றம் நடக்கிறது என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு காலத்தில், ‘போலி எப்ஐஆர்’ பதிவு செய்ததில் ‘சாதித்ததும்’, இதே தமிழகக் காவல்துறைதான். இணையதளத்தில் பதிவேற்றம், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால், பொதுமக்கள் காவல்துறையைப் போற்றுவர். ‘போற்றுவது போல் நடக்காவிட்டாலும் பரவாயில்லை; தூற்றுவதற்கு வாய்ப்பு தராமல் காவல்துறை நடந்துகொள்ளுமா?’ என்பதே பொதுமக்கள் முன்வைக்கும் கேள்வி. சுடச்சுட எப்ஐஆர் பதிவேற்றம் உள்பட எந்த அதிரடி உத்தரவும் தேவையில்லை - மக்கள் நலனில் அக்கறை காட்டும் காவல்துறை வாய்த்துவிட்டால்...!