உத்திரப்பிரதேச தேர்தலையொட்டி மகா யாத்திரை செல்லும் ராகுல்: 2500 கிமீ பயணம் மேற்கொள்கிறார்
9/4/2025 2:56:55 PM
புதுடெல்லி: உத்திரப்பிரதேச தேர்தலையொட்டி, கட்சியை பலப்படுத்தும் வகையில், மகா யாத்திரையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பங்கேற்கிறார். ஏழைகள், விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். உத்திரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பாஜ, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் சூழல் உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள இக்கட்சிகள் தயாராகி வருகின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து காங்கிரஸ் பின்னடவை சந்தித்து வருகிறது. தனது செல்வாக்கை நிரூபிக்க உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் மாநில தலைவர் ராஜ்பாப்பர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்சித்தும் மக்களை சந்தித்து வருகிறார். உத்திரபிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தியும் களமிறங்குகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் வாரணாசியில் நடந்த பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார். இந்நிலையில், துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்குபெறும் மகா யாத்திரைக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த யாத்திரை நாளை மறுநாள் உத்திரபிரதேச மாநிலம், தியோரியா பகுதியில் தொடங்குகிறது. சுமார் 2500 கிமீ தூரத்துக்கு ராகுல் பயணம் செய்கிறார்.
233 தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்கள், நகரங்களில் இந்த யாத்திரை நடக்கிறது. யாத்திரையின்போது, ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். அவர்களது உரிமைகள் குறித்து எடுத்துரைக்கிறார். ராகுல் காந்தியின் யாத்திரை மூலம் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.