பீகாரில் கனமழைக்கு பலி 198ஆக உயர்வு
9/4/2025 2:54:41 PM
பாட்னா: பீகாரில் பெய்துவரும் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது. முகாம்களில் லட்சக்கணக்கானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பீகாரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். புஷார், போஜ்பூர், வைசாலி, சரண் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 2,179 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது. சில தினங்களில் மட்டும் 19 பேர் இறந்துள்ளனர். பாட்னாவில் அதிகளவாக 10 பேரும், சரண் பகுதியில் 3 பேரும் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சேதமடைந்தன. பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சுமார் 7 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 2,714 படகுகள் பயன்படுத்தப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 700 முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டு வருகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கில் இருந்து மாடுகளை பாதுகாக்க தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் குழுவினர் மீட்பு பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.