ஊராட்சி மன்றத்துக்கு புதிய கட்டிடம்
9/3/2025 1:04:23 PM
ஊத்துகோட்டை, -ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இதில் கிராம மக்கள் வீட்டு வரி, குழாய் வரி, கடைகளுக்கு லைசென்ஸ் ஆகியவையும் பொதுமக்கள் தங்கள்
பிரச்னை குறித்து பேசுவதற்காக குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்களும் நடைபெறும்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.கடந்த 2 வருடமாக ஊராட்சி கட்டிடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அங்குள்ள நூலக கட்டிடத்தில் ஊராட்சி மன்றம் இயங்கி வருகிறது. இதனால் வரிசெலுத்த வரும் மக்கள் எங்கு வரி செலுத்துவது என தெரியாமல் திணறி வருகின்றனர். கிராம சபை கூட்டங்களை நடத்த இடம் இல்லாமல் நூலக கட்டிடத்தின் வெளியே நடத்துகின்றனர்.
எனவே ஊராட்சிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.