பாலீஷ் போடுவதாக கூறி செயின் திருட்டு வடமாநில வாலிபருக்கு சரமாரி அடி - புழலில் இன்று காலை பரபரப்பு
9/3/2025 12:43:35 PM
புழல், -புழல் பகுதியில் இன்று காலை பாலீஸ் போடுவதாக கூறி பெண்ணின் செயினை திருடி தப்ப முயன்ற வடமாநில வாலிபர் சிக்கினார். அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.சென்னை அருகே புழல், யுவராஜ் தெருவை சேர்ந்தவர் பாத்திமா (58). இவர் இன்று காலை வீட்டில் இருந்தபோது, வடமாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தரமட்டுமா? என்று பாத்திமாவிடம் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாத்திமா வீட்டுக்குள் சென்று, பீரோவில் இருந்த 2 சவரன் தங்க செயினை எடுத்துவந்து அந்த வாலிபர்களிடம் பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்துள்ளார்.
இதன்பிறகு வாலிபர்கள், தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் தங்க செயினை போட்டு பாலீஷ் சிறிது நேரம் கழுவியுள்ளனர். அப்போது செயின் உருகி, தண்ணீர் கலந்துவிட்டது. அதிர்ச்சியடைந்த பாத்திமா, வாலிபர்களிடம் சண்டைபோட்டு கத்தியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் ஒரு வாலிபர் தப்பிவிட்டனர். மற்றொரு வாலிபரை மக்கள் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொதுமக்கள் பிடியில் இருந்த வடமாநில வாலிபரை மீட்டனர். அவரிடம் இருந்து தங்க நகை உருக வைத்திருந்த கெமிக்கல் பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபரை கைது செய்தனர். தப்பிவிட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.