வாழப்பாடி அருகே பயங்கரம் - விவசாயி, வாலிபர் அடித்து கொலை
9/3/2025 12:40:01 PM
வாழப்பாடி, -வாழப்பாடி அருகே வெவ்வேறு இடங்களில் விவசாயி, வாலிபர் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜ்குமார் (23). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள கோயிலின் பின்புறமுள்ள வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவருடைய தலையில் கட்டையால் ஓங்கி அடித்ததுபோல் காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் தொடர்பில் வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
கருமந்துறை அருகே தும்பல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இன்று காலை ஒருவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அங்கிருந்தவர்கள் ஏத்தாப்பூர் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் தும்பலை சேர்ந்த விவசாயி ராமசாமி (62) என்பது தெரியவந்தது. அவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். 2வது மனைவி ஜெயகொடிக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு அவருடைய மகள் ஆனந்தசெல்வி வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டை விட்டு வெளியே சென்ற ராமசாமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு பள்ளி அருகில் கிடந்தது தெரியவந்தது. சொத்து தகராறில் ராமசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.