மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா - கருங்குருவிக்கு உபதேசம் செய்யும் திருவிளையாடல்
9/3/2025 12:38:33 PM
மதுரை, -மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திரு விழாவில் இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்தல் திருவிளையாடல் நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் சுந்தரேஸ்வரர் நடத்திய திருவிளையாடல்கள் நிகழ்த்தி காட்டப்படுகின்றன. கடந்த ஆக.28ல் மீனாட்சி கோயிலில் இத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர்.இன்று காலை 9 மணியளவில் சுவாமியுடன் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் குலாலர் மண்டபத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளினர். `கருங்குருவிக்கு உபதேசம்’ நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 9 மணியளவில் சுந்தரேஸ்வரரின் ‘கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை’ நடந்தது. இரவு 7 மணியளவில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மவாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வருகின்றனர்.
கோயில் புலவர் கூறுகையில் ``முற்பிறவியில் புண்ணிய காரியங்கள் செய்த ஒருவர், சிறிது பாவமும் செய்ததால் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தார். அந்த குருவியைக் காகங்கள் மிகவும் துன்புறுத்தின. காகங்களிடம் இருந்து தப்பிய குருவி, ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து, தன் நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தது. அம்மரத்தின் கீழே இருந்த சிலர், மதுரையின் பெருமை மற்றும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என பேசிக் கொண்டிருந்தனர். உடனே மதுரைக்கு பறந்து வந்த குருவி, பொற்றாமரைக் குளத்திலே நீராடி இறைவனை வணங்கியது. இறைவனும் அக்குருவியின் பக்திக்கு இரங்கி, மரணத்தை வெல்லும், `மிருத்யுஞ்சய மந்திரத்தை’ உபதேசித்தார். இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று’’ என்றார்.