பொதுமக்கள் எதிர்ப்பை மீறி காவிரியில் மணல் குவாரிகள் - இந்திய கம்யூனிஸ்ட் எச்சரிக்கை
9/3/2025 12:36:54 PM
கரூர், -கரூர் மாவட்டம் சேமங்கி, தவிட்டுப்பாளையம் காவிரியாற்றில் புதிய மணல் குவாரி அமைத்துள்ளதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.பின்னர் மகேந்திரன் கூறியதாவது: சட்டவிதிகளுக்கு புறம்பாக மிகப்பெரிய மணல் கொள்ளை நடக்கிறது. தற்போது புதிதாக இந்த வட்டாரத்தில் காவிரியாற்றில் 4 மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழஙகியுள்ளது. இதனை எதிர்த்து இப்பகுதி மக்கள், நீரேற்று பாசன விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் போராடி வருகின்றனர். தமிழக அரசு குவாரிகள் செயல்பட தடை விதிக்காவிட்டால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். புகழூர் வட்டாரத்தில் காகித ஆலை, சிமென்ட் ஆலை, சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் இந்த நீராதாரத்தை நம்பியுள்ளனர். ஏற்கனவே நொய்யல் ஆறு மாசடைந்து அந்த நீரை கொஞ்ச நஞ்சம் இருக்கும் காவிரியாற்று மணல்தான் சுத்திகரிக்கிறது. இதுவும் போய் விட்டால் குடிநீருக்கே பிரச்னை ஏற்படும். இப்பகுதி மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த குவாரிகளை தடைசெய்ய தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் மிகக் கடுமையாக மக்கள் போராட்டத்தை சந்திக்க நேரிடும். கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். தமிழக அரசால் உயர் அதிகாரிகளே டிஸ்மிஸ் செய்யப்பட்டதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல்வர் மற்றும் தமிழக அரசின் பெயரை பயன்படுத்திதான் மணல் கொள்ளை நடக்கிறது.இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு ஏற்கனவே கோர்ட் உத்தரவின்மூலம் தாமிரபரணியில் மணல் கொள்ளையை தடுத்தார். நாங்களும் துணைபோகும் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம். குவாரி லைசென்சை திரும்ப பெறும்வரை உண்ணாவிரதம் போன்ற பல தொடர் போராட்டங்களை நடத்துவோம்.