நிதி பற்றாக்குறையால் தள்ளாடும்
9/3/2025 12:36:29 PM
காரைக்குடி, -தமிழகத்தில் 4,521 நூலகங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் 110 நூலகங்கள் உள்ளன. நூலகங்கள், கல்வித்துறையில் உள்ள பொது நூலகத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இத்துறைக்கு என நிரந்தர இயக்குநர், இணை இயக்குநர் இல்லை. தவிர 16 மாவட்டங்களில் நிரந்தர மாவட்ட நூலக அலுவலர் நியமிக்கப்படாமல் உள்ளது.உள்ளாட்சி துறைகளில் வீட்டுவரியுடன் 10 சதவீதம் நூலக வரி சேர்த்து வசூல் செய்யப்படுவதே இத்துறைக்கான நிதி. இந்த நிதியைஅந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழு கணக்கில் உள்ளாட்சி நிர்வாகமே நேரடியாக செலுத்த வேண்டும். நூலக நிதியில் 25 சதவீதத்துக்கு தான் புதிய நூல்கள் வாங்க வேண்டும். ஆனால் 2009 முதல் 2013 வரை நூல்கள் வாங்காமல் 2013 டிசம்பர் முதல் நடப்பு ஆண்டு வரை 4 ஆண்டு கால நூல்கள் ஒரே ஆண்டில் வாங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரை முறையற்ற முறையில் நூல்கள் வாங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் நூலகத் துறை போதிய நிதியின்றி தள்ளாடி வருகிறது. அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்கள், தாங்கள் பணியாற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு சென்று நூலக நிதி வசூல் செய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர அடிப்படை வசதியான மின்வசதி, குடிநீர், சேர் வாங்க மற்றும் கட்டிட பராமரிப்புக்கு நூலகர்களே பொதுமக்களிடம் நன்கொடையாக பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நூலகர்கள் புலம்பி வருகின்றனர்.
நூலகர்கள் கூறுகையில், ‘பஞ்சாயத்து நிர்வாகம் நேரடியாக பணத்தை நூலக நிதி கணக்கில் செலுத்த வேண்டும். நாங்கள் வசூல் செய்வதற்கான அதிகாரம் இல்லை. நாங்கள் சென்று பணம் கேட்டால் உங்களிடம் தர முடியாது கணக்கில் கட்டி விடுகிறோம் என கூறி அனுப்பி விடுகின்றனர். நன்கொடை என்ற பெயரில் அரசு பணியில் உள்ளவர்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளனர். புத்தகங்கள் அதிகமாக வாங்கிவிட்டு வைக்க ரேக், உரிய கட்டிட வசதி இல்லாததால் கரையான் அரிக்கும் நிலையில் உள்ளது. கரையான் அரிக்கும் புத்தகங்களுக்கு எங்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கின்றனர். கழிப்பிட வசதி இல்லாமல் பல்வேறு நூலகங்கள் உள்ளன. மாதாந்திர கூட்டம் நடத்தி கோரிக்கைகளை கேட்பது இல்லை. நூலக நிதியை அரசு நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டும். திட்ட ஒதுக்கீடு அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும்’ என்றனர்.