சதுர்த்தி விழா கோலாகலம் - பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம்
9/3/2025 12:36:07 PM
திருப்புத்தூர், -சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நாளை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு வரும் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கற்பகவிநாயகர் கோயிலில் கடந்த 27ம் தேதி கொடியேற்றப்பட்டு சதுர்த்தி விழா துவங்கியது.
ஒன்பதாம் நாளான நாளை காலையில் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை, வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருவார். மாலை 4 மணியவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வருவர். இரவு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வருவார்.செப்.5ம் தேதி காலை கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.