தங்க மீன்கள்
9/3/2025 12:25:43 PM
அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களாக வாங்கிக் குவித்ததைப் பார்க்கும், ஒவ்வொரு இந்தியரும் ஏங்காமல் இருக்க முடியாது. 127 கோடி மக்கள்தொகை கொண்ட தேசத்தில், நீச்சலில் அசத்தக்கூடிய ஒரு வீரர் கூட இல்லையா என்று ஆதங்கப்படுவோம்.திறமைசாலிகள் இருக்கிறார்கள். விளையாட்டில் ஊக்குவிப்புத்தான் வீரர்களுக்கு உற்சாகத்தைத் தரும். குற்றாலீஸ்வரன் என்ற தங்க மீனின் பெயர், 1990 வாக்கில் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. இங்கிலீஷ் கால்வாய் உள்பட நீண்ட கால்வாய்களை நீந்திக் கடந்த சாதனையாளர். அர்ஜூனா விருது பெற்றவர். ஆனால், அதற்குப் பிறகு அரசு உள்பட அனைவருமே குற்றாலீஸ்வரனை மறந்து விட்டார்கள். தங்க மீன் சாதிக்க முடியாமல் போனது.
தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் அரசு சார்பில் நீச்சல் குளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் இங்கு மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டிருந்தால், பல குற்றாலீஸ்வரன்களை உருவாக்கியிருக்க முடியும். மைக்கேல் பெல்ப்ஸ் போல் பதக்கங்களை வாங்கிக் குவிக்க வைத்திருக்கலாம்.நீச்சல் குளத்துக்குத் தற்காலிகப் பயிற்சியாளர்கள் நியமித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களும் நிலைத்திருப்பதில்லை. பயிற்சி அளிக்க சிறந்த பயிற்சியாளர்கள் கிடைப்பதில்லை. காரணம், வெளிமாநிலங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் இங்கோ வழங்கப்படுவது ரூ.13 ஆயிரம் மட்டும்தான். அதுவும் தற்காலிக அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனர். மாநிலம் முழுவதும் 27 இடங்களில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டாலும், விழுப்புரம், தஞ்சை உள்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பயிற்சியாளர்கள் இல்லை.
தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க பெற்றோர்கள் பலர் ஆர்வமாக இருந்தாலும், பயிற்சியாளர்கள் இல்லாததால் பயிற்சி பெற முடிவதில்லை. பயிற்சி அளிக்க விரும்பும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் உதவியுடன் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் நிலைதான் உள்ளது. முறையான பயிற்சி கிடைக்காததால், நீச்சலில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் கூட, போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போகிறது.
தேசியப் போட்டிகளுக்குச் செல்லக்கூட, தமிழகத்தில் இருந்து நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆசியப்போட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வாங்குவது சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
ஒலிம்பிக்கில் சாதிப்போம் என்பது மேடையில் முழங்கும் விஷயமல்ல; செயல்திறன் இருந்தால்தானே சாதனை வசப்படும்? தங்க மீன்களாக மாணவ, மாணவிகள் நிறைந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் அடையாளம் கண்டறியப்பட வேண்டுமே! அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்க மத்திய, மாநில அரசுகள், ஆக்கப்பூர்வத் திட்டங்களை வகுத்தால்தானே அது சாத்தியம்!