சிறுவாணியில் கேரளா அணை கட்டுவதை கண்டித்து கோவையில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்
9/3/2025 12:21:18 PM
கோவை, -மேற்கு தொடர்ச்சி மலையில், நீலகிரியில் உருவாகும் பவானி, சிறுவாணி ஆறுகள் கேரளா சென்று பின்னர் தமிழக பகுதிக்குள் நுைழகின்றன. இந்த ஆறுகள் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.இந்நிலையில், சிறுவாணி, பவானி ஆறுகள் இணையும் இடமான கட்டக்கோடு என்னும் இடத்தில் கேரள அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த இடம் தமிழக எல்ைலயான கோவை ஆனைகட்டியில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ளது.கேரள அரசு கட்டும் இந்த புதிய அணையால் கொங்கு மண்டலம் வறண்டு போகும், பல லட்சம் ஏக்கர் பாசன நிலம் தரிசாகிவிடும் என விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி, திமுக கண்டன ஆர்ப்பாட்டம் கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் இன்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.
‘தமிழகத்தில் திராணியற்ற ஆட்சி’
சென்னை: தமிழகத்தில் திராணியற்ற ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும், இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதத்திலும் கோவையில் இன்று போராட்டம் நடக்கிறது. திமுக சார்பில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல திமுக தலைவர் கருணாநிதி நடவடிக்கை எடுப்பார்.
சட்டசபையில் எதிர்க்கட்சியினர் எழுப்பக்கூடிய பிரச்னைகளை சந்திப்பதற்கு வக்கற்ற, வகையற்ற, ஒரு திராணியற்ற ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்கள், இந்த ஆட்சியின் செயல்களை கூர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.